Published : 22 Apr 2022 06:24 AM
Last Updated : 22 Apr 2022 06:24 AM

தூத்துக்குடி | பள்ளி செல்லாத 7 குழந்தைகள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி சூசைநகர் பகுதியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி: பள்ளி செல்லா குழந்தைகள் 7 பேர் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோரது அறிவுரையின் பேரில், தூத்துக்குடி ஊரக வட்டத்துக்கு உட்பட்ட சூசைநகர், சுனாமி காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் பணி நேற்று நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விஉதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர் சுடலைமணி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையில், தொழிலாளர் நலத்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது இப்பகுதியில் நீண்ட காலமாக பள்ளிக்குச் செல்லாத 7 மாணவர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை பள்ளியில் சேர்க்க அவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, 7 பேரையும் இன்று (ஏப்.22) பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x