Published : 21 Apr 2022 08:57 PM
Last Updated : 21 Apr 2022 08:57 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி இனி முழுவதும் ரொக்கமாக... - முதல்வர் ஸ்டாலினின் 20 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவிக்கான முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும், பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு மாநில விருதுகள் வழங்குதல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்குதல், அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்ட குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவர் வெளியிட்ட 20 முக்கிய அறிவிப்புகள்:

>மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.

> தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம், பிசிஏ பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும்.

> சென்னை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவைகளைப் பெறுவதற்காக சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில் கூடுலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.

> மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுயதொழில் கடன் உதவி திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் ரூ.25,000 தொகையினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும்.

> மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள வயது உச்ச வரம்பினை 45-ல் இருந்து 60-ஆக நீட்டித்து ரூ.1.48 கோடி செலவில் வழங்கப்படும். இத்திட்டதின் மூலம் 2100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.

> மாநிலம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்கங்களில் ரூ.37.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தணிக்கை மேற்கொண்டு தடையற்ற சூழல் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக முதற்கட்டமாக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்பு பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900-லிருந்து ரூ.1200-ஆக உயர்த்தி ரூ.3.92 கோடி கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.60 லட்சம் செலவில் இரண்டு மாநில விருதுகள் வழங்கப்படும்.

> புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாகவும், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள இரண்டு செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் ரூ.1.15 கோடி செலவில் 128 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்தப்படும்.

> அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க தேவையான வாடகை முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

> அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தும் பொழுதும் முக்கிய நிகழ்வுகளின் பொழுதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிப்பெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படும்.

> மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

> வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.

> கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

> தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பினை கண்டறிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு அமைத்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 8 இல்லங்கள், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூ.91.72 லட்சம் செலவில் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

> பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50-லிருந்து 40-ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x