Last Updated : 21 Apr, 2022 06:45 AM

 

Published : 21 Apr 2022 06:45 AM
Last Updated : 21 Apr 2022 06:45 AM

ஆள் பற்றாக்குறையால் ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்: புதுச்சேரி ஊரகப் பகுதியில் புதிய நடைமுறை

புதுச்சேரி அருகேயுள்ள கொடாத்தூர் கிராமத்தில் ‘ட்ரோன்’ மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிக்கப்படுகிறது.

புதுச்சேரி: ஆள் பற்றாக்குறையால் புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் விவசாயப் பயிர்களுக்கு ’ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்க விவசாயிகள் தொடங் கியுள்ளனர்.

புதுச்சேரி ஊரகப் பகுதியின் முக்கிய தொழில் விவசாயமாகும். விவசாய பணிக்க ளுக்கான ஆட்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், விவசாயம் மேற்கொள்வோர் நடவு, அறுவடை உள்ளிட்ட வேலைகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை நாடத் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கொடாத் தூர் கிராமத்தில் ‘ட்ரோன்’ மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிக்கும் முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் கூறும்போது, “கைத்தெளிப்பான் மற்றும் ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் பூச்சி மருந்துகளைத் தெளித்து வந்தோம். ஆள் பற்றாக்குறை மற்றும் நவீன தொழில்நுட்ப வசதி காரணமாக, தற்போது ‘ட்ரோன்’ மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிக்கும் வசதிக்கு மாறி வருகிறோம். இது எங்களுக்கு மிகப்பெரிய லாபகரமானதாக உள்ளது.

ஆட்கள் மூலம் 100 ஏக்கர் நெற்பயிருக்கு மருந்து தெளிப்பதற்கு 5 அல்லது 6 நாட்களாகும். ஆனால், ‘ட்ரோன்’ மூலம் 14 மணிநேரத்தில் இந்த வேலையை முழுமையாக முடித்துவிடுகிறோம். இதனால் செலவும் குறைந்துள்ளது” என்றார்.

‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிப்பதை வடிவமைத்து இயக்கிய விக்ரம் சக்ரவர்த்தி கூறும்போது, “பி.எஸ்சி., வேளாண் படித்த நானும், நண்பர்களும் விவசாயத்தை விரும் பினோம்.

வேறு நிறுவனத்தில் பணிபுரிவதை விட விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்த இம்முறையை வடிவமைத்தோம். ‘ட்ரோன்’ மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க முடியும். பயிர்களுக்கான டானிக் தெளிக்க முடியும். குறைந்த நேரத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே சீராக மருந்து தெளிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

வேளாண் அலுவலர் வெங்கடாச்சலம் இதுபற்றி கூறும்போது, “ட்ரோன் மூலம் விவசாய நிலங்களில் மருந்து, ஊட்டச்சத்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.400 செலவாவதை கணக்கிட்டோம். இது முந்தைய செலவை விட குறைவு. இந்த மருந்து தெளித்த ஏக்கரில் விளைச்சலை பார்ப்போம். அதைத் தொடர்ந்து ஆய்வு செய்து ட்ரோன் மூலம் மருந்து, ஊட்டச்சத்து தெளிப்பதை புதுச்சேரியில் விரிவுப்படுத்த பரிந்துரைப்போம்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x