Published : 10 May 2016 05:52 PM
Last Updated : 10 May 2016 05:52 PM
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையை தீர்மானிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய அரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு செல்லும் என்று ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இந்தத் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு செல்லும் என்று கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க குறைந்த அவகாசமே இருக்கும் நிலையில், இத்தீர்ப்பு அடுத்த கல்வியாண்டிலிருந்து தான் செயல்படுத்தப்படும் என்று கல்வியாளர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்த வேளையில், வரும் ஆண்டிலிருந்தே இந்த நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்று கடந்த மாதம் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அடுத்த குண்டை வீசியது.
இதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தான் உச்ச நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு வாய்ப்ப்புகளை மிகக் கொடூரமான முறையில் பறிக்கும் தீர்ப்பாகும்.
எந்த வகையில் பார்த்தாலும் இந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மருத்துவக் கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் செயலாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
இதுபோன்ற சிக்கலான சூழல்கள் ஏற்படும் போது உச்ச நீதிமன்றம் தான் தலையிட்டு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், இப்போது உச்ச நீதிமன்றமே மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையை தீர்மானிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என தீர்ப்பளித்திருக்கிறது. இது மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்கும் செயல்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பாமக நடத்திய சட்டம் மற்றும் அரசியல்ரீதியிலான போராட்டங்களின் பயனாக மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தைப் பொருட்படுத்தாமல் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்பது மிகப்பெரிய அநீதி.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் பொது நுழைவுத் தேர்வு என்பதே ஏற்க முடியாத ஒன்றாகும். பெருநகரங்களில் கிடைக்கும் கல்விக்கும், குக்கிராமங்களின் பள்ளிகளில் வழங்கப்படும் கல்விக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு சமமானதாகும். இவ்வாறு இருவேறுபட்ட கல்வி பயிலும் மாணவர்களை ஒன்றாக கருதுவது சமூகநீதிக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உணராதது வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் பாமகவின் முயற்சியால் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் ஊரக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் அதிக எண்ணிக்கையில் சேருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஊரக மாணவர்களில் மருத்துவப் படிப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டால், அதன்பின் கிராமப்புறங்களில் இருந்து மருத்துவர்கள் உருவாவது குறைந்து, ஊரக மக்களுக்கான மருத்துவ வசதிகளும் குறைந்து விடும். இது சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும்.
இப்படி ஒரு நிலை ஏற்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையை தீர்மானிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஒருவேளை வரும் 13 ஆம் தேதிக்குள் இரு அவைகளிலும் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது சாத்தியமில்லாவிட்டால், நடப்புக் கூட்டத்தொடர் மே13 ஆம் தேதி முடிவடைந்தவுடன் இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT