Published : 14 Apr 2016 08:36 AM
Last Updated : 14 Apr 2016 08:36 AM
பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப் புள்ள நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றனர்.
சென்னை தி.நகர் சோமசுந்தரம் தெரு வில் நடிகை ராஜஸ்ரீ (72) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர். ராஜஸ்ரீ தனக்கு சொந்தமான நகைகளை தி.நகர் பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அந்த நகை களையும், ரூ.1 லட்சத்தையும் வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு, வெளியே நிறுத்தியிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், கார் அருகே சில 10 ரூபாய் நோட்டுகளை வீசி, ‘இது உங்களுடைய பணமா’ என்று நடிகை ராஜஸ்ரீயிடம் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜஸ்ரீ தனது பணம் ஏதும் கீழே விழுந்து விட்டதோ என்று நினைத்து, காரை விட்டு கீழே இறங்கினார். உடனே அந்த நபர் காரில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, சிறிது தூரத்தில் தனது கூட்டாளி தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜஸ்ரீ, தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ராஜஸ்ரீ புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடர் களை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கேமராவில் உருவம் பதிவு
வங்கிக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் திருடனின் உருவம் பதிவாகி உள்ளது. மேலும், அவர்கள் சென்ற வழியில் மேலும் சில கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில் வண்டியின் எண் மற்றும் இருவரின் உருவங்களும் தெரியவந்துள்ளது. அதை வைத்து இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT