அரசு பஸ் மோதியதில் கால் விரல்களில் எலும்பு முறிவு: கோவை இளைஞருக்கு ரூ.9.48 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அரசு பஸ் மோதியதில் கால் விரல்களில் எலும்பு முறிவு: கோவை இளைஞருக்கு ரூ.9.48 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோவை: கோவை போத்தனூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு(34). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவை ரயில் நிலையம் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் முன்னால் சென்ற அரசுப் பேருந்து, எவ்வித சிக்னலும் செய்யாமல் வலதுபுறம் திரும்பி, விக்னேஷ்பிரபு ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், அவரது இடது கால் பாதத்தில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால், சதை, தோல் முழுவதும் நசுங்கி 5 விரல்களில் எலும்புமுறிவு ஏற்பட்டது. விபத்து நடந்தபோது தனியார் நிறுவனத்தில் கணக்காளராக விக்னேஷ்பிரபு பணியாற்றி, மாதம் ரூ.25 ஆயிரம் பொருளீட்டி வந்துள்ளார்.

விபத்து காரணமாக வருவாய் இழப்பு, பழைய நிலையில் வேலைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, தனக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்புசார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா பிறப்பித்த உத்தரவு: அரசுப் பேருந்துஓட்டுநரின் அதிவேகம், கவனக்கு றைவு, அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது. 5 விரல்களின் எலும்புகள் நொறுங்கியுள்ளதால், இடது காலில் நீண்டநேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும், இயல்பாக செய்யக்கூடிய அத்தியாவசிய வேலைகளையும் செய்யமுடியாத நிலையும் மனுதாரருக்கு ஏற்பட்டுள்ளது.

மனுதாரரை ஆய்வு செய்த மருத்துவ வாரியம், அவருக்கு 27 சதவீதம் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சான்று அளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட வலி, வேதனை, மருத்துவச் செலவு,வருவாய் இழப்பு, எதிர்கால மருத்துவ செலவினம் ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ.9.48 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் கோவை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in