

சென்னை: நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குப்பைக்கிடங்குக்குள் நுழைவதற்கா என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, குப்பை சேகரிப்பு மற்றும் குப்பை பிரிக்கும் தளமாக அந்த கால்வாய் மாறி வருவதாக குற்றம் சாட்டி தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் பிறப்பித்ததோடு சரி. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி.நானே என்பவரை நீதிமன்ற ஆணையராக நியமித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கு குப்பை கிடங்கு செயல்படவில்லை எனக்கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்கள் தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், விதிமீறல்கள் தொடர்பாக மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நீதிமன்ற ஆணையர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் அங்கு குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதையடுத்து நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து, மாமல்லபுரத்துக்குள் நுழைய நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குப்பைக் கிடங்குக்குள் நுழைவதற்கா என கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.