Published : 19 Apr 2022 07:11 PM
Last Updated : 19 Apr 2022 07:11 PM

மாணவர் தமிழ் மன்றங்கள் முதல் பாரிசில் திருக்குறள் மாநாடு வரை: தமிழ் வளர்ச்சித் துறையின் 17 அறிவிப்புகள்

சென்னை: கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்த ரூ.5 லட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கட்டமைப்பும் பணிகளுக்காக ரூபாய் 61.50 லட்சம் வழங்கப்படும், கலைப் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும் நாட்டுப்புறப் பாடல்கள் வடிவிலும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும், அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்புச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அவர் வெளியிட்ட 17 முக்கிய அறிவிப்புகள்:

> மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூபாய் 5 லட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூபாய் 5 கோடியும், இவ்வாண்டு போட்டிகள் நடத்திட ரூபாய் 36 லட்சமும் என மொத்தம் ரூபாய் 5.36 கோடி வழங்கப்படும்.

> தமிழகம் முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகள் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுதோறும் ரூபாய் 9,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 5.60 கோடி வழங்கப்படும்.

> தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இதற்கென ரூபாய் 2.11 கோடி வழங்கப்படும்.

> தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) உயர்புள்ளிகளைப் பெற்றிடத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சிறப்புச் சீர் காப்பு செய்யப்படும். இதற்கென ரூபாய் 2 கோடி வழங்கப்படும்.

> திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ ) அங்கீகாரம் பெறும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நடத்திட ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

> உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகத்தை மேம்படுத்திடவும், நூலகத்தை கணினிமயமாக்கி தரம் உயர்த்திடவும் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் நூலகத்தினை மேம்படுத்திடவும் ரூபாய் 78 லட்சம் வழங்கப்படும்.

> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கட்டமைப்பும் பணிகளுக்காக ரூபாய் 61.50 லட்சம் வழங்கப்படும்.

> தமிழ் வளர்ச்சி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்குக் கணினி மற்றும் அச்சுக் கருவிகள் வழங்கப்படும். இதற்கென ரூபாய் 57 லட்சம் வழங்கப்படும்.

> மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கம் செய்வதற்காகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து துறைசார் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கலைச் சொல் அகராதிகள் உருவாக்கப்படும். இதற்கென ரூபாய் 35 லட்சம் வழங்கப்படும்.

> மதுரை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அயல்நாடு வாழ் தமிழர்களின் படைப்புகளுக்காகச் சிறப்புப் பிரிவு ஏற்படுத்திடவும் உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தைப் புனரமைப்பு செய்திடவும் ரூபாய் 26 லட்சம் வழங்கப்படும்.

> புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம் சந்ததியினர் மொழி வரலாறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் அங்குள்ள நூலகங்களுக்குத் தமிழ் நூல்கள் வழங்கப்படும். இதற்கென ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும்.

> பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் தமிழின் மீது ஆர்வத்தையும் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்படும். இதற்கென ரூபாய் 16.72 லட்சம் வழங்கப்படும்.

> அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தில் பயிலரங்கம் நடத்திடவும் மண்டல மற்றும் மாநில அளவில் தமிழில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் போட்டிகள் நடத்திடவும் ரூபாய் 16 லட்சம் வழங்கப்படும்.

> கலைப் பண்பாட்டுத் துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும் நாட்டுப்புறப் பாடல்கள் வடிவிலும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும். இதற்கென ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.

> தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக மற்றும் சிறப்பாகச் செயல் படுத்தும் முதல் மூன்று மாவட்டங்களுக்குப் பரிசுத் தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியன மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும். இதற்கென ரூபாய் 7 லட்சம் வழங்கப்படும்.

> தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் மற்றும் அலைபேசி மூலம் ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களைத் தாமே உள்ளீடு செய்திடும் வகையில் கலைச்சொல் தொகுப்பி எனும் செயலி தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உருவாக்கப்படும். இதற்கென ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.

> அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்புச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்கென ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x