Published : 19 Apr 2022 11:59 AM
Last Updated : 19 Apr 2022 11:59 AM

'தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அறிக்கையில் திமுகவின் இரட்டை வேடத்திற்கு விடை இல்லை' - ஓபிஎஸ் சாடல்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தி மொழி விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் முதல்வர் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அமைச்சர் தன்னுடைய அறிக்கையில், இந்தியத் திருநாட்டில் உள்ள முதல்வர்களின் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும், இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் தமிழக முதல்வர் போற்றுவதாக தெரிவித்து இருக்கிறார். தமிழக முதல்வரின் தலைமையிலான திமுக அரசு குறித்து டெல்லியில் உள்ள இரண்டு தொலைக்காட்சி சேனல்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் திமுக ஆட்சியில் ரவுடியிசம் தலை தூக்கி உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், திமுக-வினர் அராஜகச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், கோயில்களை இடிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறது என்றும் நேற்றைய முன் தினம் பத்திரிகையில் செய்தி வந்துள்ளதை அமைச்சர் பார்க்கவில்லை போலும்!

இந்தி மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்திற்கு தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைபாட்டினை உறுதிபட முதல்வர் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலைப்பாடு ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும். இந்தத் தருணத்தில் ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுவது எனது கடமை. 16-09-2020 அன்று தமிழக சட்டப்பேரவையில் மூலிகைகள் சம்பந்தமான ஒரு புத்தகம் சுகாதாரத் துறையின் மூலமாக வைக்கப்பட்டபோது, அதிலே மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அது மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது போல இருக்கிறது என்று கூறியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர். ஆனால், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதை தமிழக அரசின் இணையதளத்திலேயே வெளியிடுகிறது திமுக அரசு.

அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடு. ஆட்சிக்கு முன் உள்ள நிலைப்பாட்டினை அமைச்சர் மறந்துவிட்டார் போலும்! அடுத்தபடியாக, இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து 'ஒன்றுமே தெரியாது' என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்கு தெரியாததால் 'ஒன்றுமே தெரியாது' என்று கூறினார். பின்னர், அதற்கு மறுநாளே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

காரணம், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை தான் அதிமுக-வின் நிலைப்பாடு. தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அதிமுக-வின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது. எனவே, ஒரே நிலைப்பாடுதான்.தமிழுக்காக திமுக அரசு செய்த சாதனைகளை அமைச்சர் பட்டியலிட்டு இருக்கிறார். இதுபோன்ற சாதனைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைபெறுகின்ற இயல்பான ஒன்றுதான். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1981ம் ஆண்டு மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 1995-ம் ஆண்டு தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடும் நடத்தப்பட்டன.

1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தை துவக்கிய பெருமை அதிமுக-வையும், எம்ஜிஆரையும் சாரும். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசின் பங்குத் தொகையாக10 கோடி ரூபாயும், ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ஒரு கோடி ரூபாயும், 2019ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற நான்காவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு அரசின் நிதியுதவியாக 16.50 லட்சம் ரூபாயும், குவகாத்தி பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் தமிழ் நூலகம் அமைக்கவும், கணினி வழி தமிழ் மொழி கற்கக் கணினிகள் வாங்கிடவும் 2.89 லட்சம் ரூபாயும் அதிமுக அரசால் வழங்கப்பட்டது.

இதுபோன்று எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தவிர, தனிப்பட்ட முறையில், தமிழ் வளர்ச்சிக்காக ஹுஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு நான் ஏழு இலட்சம் ரூபாய் வழங்கினேன். அதிமுகவிற்கு தமிழ் மீது உள்ள அக்கறை குறித்து இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ நல்கை வழங்குமாறு இந்திய மொழிகள் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரின் 15-03-2000 நாளிட்ட கடிதம் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப் பெற்றது. அப்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. இது குறித்து 2000-2001ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீது தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவப்பெறும்" என அறிவிக்கப்பட்டது.

இதற்கேற்ப 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் ஒரே தவணையில் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அல்லது ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் 04-07-2000 நாளிட்ட கடிதம் வாயிலாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தெரிவித்ததோடு, தமிழக அரசால் அனுப்பப்பட்ட தொகையை திருப்பி அனுப்பிவிட்டது. அதற்குப் பிறகு திமுக அரசால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் தமிழ் வளர்ச்சியில் திமுக-விற்கு உள்ள அக்கறை. பின்னர், 2001ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து கோரிக்கை வரப்பெற்று, அதனை ஜெயலலிதா நிறைவேற்றினார்.

தமிழ் வளர்ச்சித் துறை இலாக்காவை தன் வசம் வைத்துக் கொண்டு இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், ஜெயலலிதாவின் பாசறையில் பாடம் பயின்ற என்னை, தமிழக முதல்வராக பதவி வகித்த என்னை, தமிழக நிதிநிலை அறிக்கையை பத்தாண்டுகள் தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பித்த என்னைப் பார்த்து முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் நான் அறிக்கை விடுத்தேன் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார் அமைச்சர். தமிழ் இலக்கிய நூல்களை இந்தி மொழியிலோ அல்லது பிற மொழிகளிலோ மொழி பெயர்ப்பதன் மூலம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழியாம் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியில் எழும். இது தமிழ் வளர்ச்சிக்கானது.

அதே சமயத்தில், முதல்வரின் விதி 110-ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் படிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடுவதன்மூலம் தமிழ் மொழி கற்கும் ஆர்வம் பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்படாது. இது தன்னலத்திற்கானது. எது எப்படியோ, 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் திமுக-வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சருக்கு நன்றி" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x