

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 84-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் வருகை தந்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கிய ஆளுநர், நேற்று காலை நடராஜர் கோயிலுக்கு மனைவியுடன் சென்றார். அவர்களை கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை ஆளுநரும், அவரது மனைவியும் தரிசனம்செய்தனர். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து சால்வை, மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.
பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அங்கிருந்து பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு புறப்பட்டு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
ஆளுநர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் கோயில் வளாகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.