ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் | ஏப்.26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் | ஏப்.26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.

ஆனால் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. சர்வர் பிரச்சினையால் பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. இதனை ஏற்று கூடுதல் கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in