Published : 18 Apr 2022 07:42 AM
Last Updated : 18 Apr 2022 07:42 AM

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் தனித் திறன்களைக் கண்டறிந்து, அவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்புவது குறித்த அறிவிப்புகள் சட்டபேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டன.

இதை சிறப்பாக செயல்படுத்த, விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகள் அறியப்பட்டு, பணிகள் மேம்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். இதுதவிர, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 148 கோரிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். இதில்40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக உள்ளன.

குறிப்பாக, அரசாணை 101, 108 ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுசார்ந்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து, இன்று (ஏப்ரல் 18) அறிவிப்பு வெளியிடப்படும்.

பள்ளிகளுக்கு சனிக்கிழமை மற்றும் கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசித்து, உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x