மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர்

அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிவிட்டு திரும்பிய சுந்தரராஜப் பெருமாள். படங்கள்:ஆர்.அசோக்
அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கிவிட்டு திரும்பிய சுந்தரராஜப் பெருமாள். படங்கள்:ஆர்.அசோக்
Updated on
1 min read

மதுரை:அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் சுந்தரராஜப் பெருமாள்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.12-ம் தேதி தொடங்கியது. சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் ஏப்.14-ல் தந்தப் பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார். கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ஏப்.16-ம் தேதி காலை 6.10 மணியளவில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.

வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.

6-ம் நாள் விழா

ஆறாம் நாளான நேற்று வண்டியூர் கோயிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் புறப்பட்டு தேனூர் மைய மண்டபத்தில் காலை 9 மணியளவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 11 மணி முதல் 3 மணிக்குள் திருமஞ்சனமாகி கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கருட வாகனத்தில் சுந்தரராஜப்பெருமாள்.
கருட வாகனத்தில் சுந்தரராஜப்பெருமாள்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சுந்தரராஜப் பெருமாள் ராமராயர் மண்டபத்துக்கு வந்தடைந்தார். அங்கு நேற்று இரவு 11 மணி முதல் விடியவிடிய தசாவதாரம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இன்று (ஏப்.18) காலை 6 மணி அளவில் மோகனாவதாரத்தில் அருள் பாலிக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் இன்று இரவு தல்லாகுளம் ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தை வந்தடைகிறார்.

நாளை (ஏப்.19) அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர்மலைக்குப் புறப்படுகிறார். ஏப்.20-ல் காலை இருப்பிடம் சென்றடைகிறார். ஏப்.21-ல் உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் தி.அனிதா ஆகியோர் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in