

சென்னை: வியக்க வைக்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. ஒன்பது தளங்களுடன் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்பட்டு வரும் இந்நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு பிரிவு உள்ளது. இதன்படி சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு, இணைய நூலகம், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளது. மேலும் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்கமும் உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த நூலகத்துக்குச் சென்று பார்வையிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அண்ணா நூற்றாண்டு உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம். இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தன. எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.