காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை ஒரே இடத்தில் செயல்படுமா? - சுகாதார அமைச்சர் பேச்சால் குழப்பம்

காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை ஒரே இடத்தில் செயல்படுமா? - சுகாதார அமைச்சர் பேச்சால் குழப்பம்
Updated on
1 min read

காரைக்குடியில் 2 இடங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையை, ஒரே இடத்தில் செயல்படுத்த கோரிக்கை உள்ள நிலையில், 2 இடங்களிலும் மருத்துவமனை செயல்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியதும், 2014-ம் ஆண்டு காரைக்குடி தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்தப்பட்டது. இங்கு தினமும் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

சராசரியாக மாதம் 150 குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் எந்த ஊரிலும் இல்லாத நிலைமையாக 2 இடங்களில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொது மருத்துவம், புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, பல், கண் சிகிச்சை, ரத்த வங்கி, சித்தா பிரிவு ரயில்வே பீடர் சாலையில் உள்ள மருத்துவமனையிலும், மகப்பேறு, குழந்தைகள் நலம், மருத்துவ காப்பீடு சிகிச்சை உள்ளிட்டவை சூரக்குடி ரோட்டில் உள்ள மருத்துவமனையிலும் செயல்படுகின்றன. இதனால் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் காரைக்குடி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இரு பகுதிகளிலும் உள்ள மக்கள் பயன்படும் வகையில் 2 இடங்களிலும் மருத்துவமனை செயல்படும் என்றார். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையை தீர்க்க ஒரு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாகவும், மற்றொன்றை மாவட்ட மருத்துவமனையாகவும் மாற்ற வேண்டும் அல்லது ஒன்றை நகர்நல மையமாகவும், மற்றொன்றை மாவட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். அப்போதுதான் பிரச்சினை தீரும் என காரைக்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இரண்டு இடங்களிலும் மருத்துவமனை பகுதி, பகுதியாகச் செயல்பட்டால், தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in