Published : 16 Apr 2022 06:45 AM
Last Updated : 16 Apr 2022 06:45 AM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாக பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஓராண்டில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை தென்மேற்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதிக்கு சில தினங்கள் முன்போ, பின்போ வடகிழக்கு பருவமழை கேரளாவில் தொடங்கும்.

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழையால் அதிக மழை கிடைத்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை தடுப்பதால், தமிழகம் தென்மேற்கு பருவமழை மறைவு பிரதேசமாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் தமிழகத்துக்கு மழை குறைவாகவே கிடைக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருமவழை காலத்தில் மட்டுமே தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும்.

சில நேரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன காலங்களில், தென்மேற்கு பருவமழை தான் கை கொடுத்து வந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 39 செமீ மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 33 செமீ மழை மட்டுமே கிடைக்கும். கடந்த ஆண்டு வழக்கத்தை விட 6 செமீ அதிகமாக மழை கிடைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களிலும்...

இதனிடையே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வழக்கத்தை விட குறைவாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலைஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் வழக்கமான அளவு (86.8 செமீ)பெய்யும். வட இந்திய பகுதிகள்,அதனை ஒட்டிய மத்திய இந்தியா, இமயமலை, வடமேற்குஇந்தியாவின் சில பகுதிகளில் வழக்கமான அல்லது வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்திய பருவமழை முறைக்கும், இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் இந்திய வானிலை ஆய்வுமையம், அப்பகுதிகளில் கடல்பரப்பு வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பருவமழை தொடக்கம் மற்றும்கிடைக்கும் மழை அளவு தொடர்பான கூடுதல் தகவல்களுடன் மே மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x