Published : 07 Apr 2016 02:46 PM
Last Updated : 07 Apr 2016 02:46 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் முடங்கிப் போன அதிமுக வேட்பாளர்கள்: சொந்தக் கட்சியினரே எதிரியானார்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான, மனுத்தாக்கல், ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதிவரை நடக்கிறது. ஏப்ரல் 30-ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். வேட் பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப்பெற மே 2-ம் தேதி கடைசி நாள்.

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். மேலும், மாவட்டம் தோறும் தேர்தல் பிரச்சார தேதியையும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

இதற்கிடையில், வேட்பாளர்கள் மீதான புகார்களை அக்கட்சியினர் அனுப்பி வருகின்றனர். இதையடுத்து, 12-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ள தமாகாவுக்கு தொகுதி வழங்க வேண்டும் என்பதால் மேலும் பலர் வாய்ப்பை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவலால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை அக் கட்சியினர் அனுப்பி வருகின்றனர். இதில், கீழ்பென்னாத்தூர் வேட்பாளர் கே.செல்வமணி மீது அதிகபட்ச புகார்கள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கலசப்பாக்கம் தொகுதி பன்னீர்செல்வம், ஆரணி தொகுதி சேவூர் ராமச்சந்திரன், போளூர் தொகுதி முருகன், செங்கம் தொகுதி தினகரன் ஆகியோர் மீதும் புகார்கள் சென்றுள்ளன.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறும் போது, ‘‘பெருமாள் நகர் கே.ராஜனை மாவட்டச் செயலாளராக நியமித்த போதே அவர் மீது புகார்கள் சென்றன. கீழ்பென்னாத்தூர் செல்வ மணி மீது பேரூராட்சி நிதி முறைகேடு புகார் எழுந்துள்ளது. கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் என்றும் போளூர் பகுதியைச் சேர்ந்தவர். எனவே, கலசப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் பன்னீர்செல்வத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆரணி தொகுதி வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியனின் ஆதரவாளர். கடந்த 5 ஆண்டில் அவர் கட்சி நிர்வாகிகளை கண்டுகொள்ளாததால், இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போளூர் தொகுதி வேட்பாளர் முருகன் வட்டி தொழில் செய்கிறார். பொதுமக்கள் மத்தியில் கந்துவட்டி புகார் இருப்பதால் செல்வாக்கு குறைவு என புகார் எழுந்துள்ளது.

செங்கம் தொகுதியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக் கண்ணு செல்வாக்கு மிக்கவர். அவருக் குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தினகரனுக்கு வாய்ப்பு அளித்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x