Published : 13 Apr 2022 04:57 PM
Last Updated : 13 Apr 2022 04:57 PM

தி.மலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்: 66 கட்டணமில்லா பேருந்துகள்; தனிநபர் ஆட்டோ கட்டணம் ரூ.30, ரூ.50 ஆக நிர்ணயம்

கோப்புப் படம்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதுடன், ஆட்டோக்களுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் செய்து திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி 15-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் நலன் கருதி ஆட்டோவுக்கான தனிநபர் கட்டணம் நிர்ணயம் செய்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரி மைதானம் வரை மற்றும் அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோயில் வரை மற்றும் திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை தனி நபர் ஆட்டோ கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேட்டவலம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை, மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை, அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை, நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோயில் வரை, பச்சையப்பன் கோயில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை, தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை தனி நபர் ஆட்டோ கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பேருந்து வசதி:

"சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருதற்காக மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்க முன் வந்துள்ளனர். இதற்காக 50 தனியார் பேருந்துகள் 16 தனியார் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை நகரில் உள்ள 950 உள்ளூர் ஆட்டோக்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனிநபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04175-232266 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். கிரிவலப் பாதையில் எந்த இடையூறும் இல்லாமல் பக்தர்கள், பொதுமக்கள் சென்றுவர வருவாய்த் துறை, போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x