

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பங்குனித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், 9 ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. இதையடுத்து, உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. எம்பெருமான் மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.30 மணிக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்நிகழ்வை சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன், வட்டாட்சியர் அமுதா, அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்துக்கு கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் தலைமை வகித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்வையொட்டி, கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் 150 போலீஸார், 50 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.