Published : 12 Apr 2022 04:47 PM
Last Updated : 12 Apr 2022 04:47 PM

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு

மதுரையில் மழை | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 13-ம் தேதி நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

14-ம் தேதி நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், 15 மற்றும் 16ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், நாளை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x