

சென்னை விமான நிலையத்தில் 61 முறை கண்ணாடி உடைந்து விழுந்தது பற்றி விளக்கம் கேட்டு மத்திய விமானத்துறை அமைச்சகத்தின் செயலாளர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடந்த 4-ம் தேதி ஒரு புகார் வந்தது. அந்த புகாரில், “சென்னை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டதில் இருந்து கண்ணாடி கதவுகள், கண்ணாடிகள், கிரானைட் கற்கள், மேற்கூரைகள் உடைந்து விழத் தொடங்கியது. இதுவரை 61 முறை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய கட்டுமானத்தில் கேள்விக்குறி எழுந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனுவை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன், “விமான நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. விமான நிலையத்தின் கட்டுமானம் தரமானதாக இருக்க வேண்டும். 61 முறை விபத்து நடந்துள்ளது. பயணிகள் பாதுகாப்பில் என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது உண்மையானால் இதுபற்றி மத்திய விமானத்துறை அமைச்சகத்தின் செயலாளர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் விசா ரணை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.