Published : 26 Apr 2016 08:31 AM
Last Updated : 26 Apr 2016 08:31 AM
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த சீனி நடராஜன் (64) கொலை செய்யப்பட்டார். இந்த விவ காரத்தில் உறவினர்களுடன் சொத்து தகராறு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் கல்வித் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தவர் சீனி நடராஜன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமண மாகிவிட்டது.
இந்நிலையில், சீனி நடராஜன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் தனியாக இருந்தபோது கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
வீட்டிலேயே கொலை நடந்ததால் தெரிந்த நபர்கள்தான் இக்கொலையை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இதில் சீனி நடராஜ னுக்கு உறவினர்களுடன் சொத்து தகராறு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, ‘பேராசிரியர் கொலையில் துப்பு துலங்கியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT