Last Updated : 11 Apr, 2022 05:58 PM

 

Published : 11 Apr 2022 05:58 PM
Last Updated : 11 Apr 2022 05:58 PM

நடந்த கொடூரத்தை மீண்டும் மீண்டும் விவரிப்பதா? - தமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ குற்றங்களும் விசாரணை சிக்கல்களும்

“விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் கணவரால் என் மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவலை நானும், என் மகளும் பதிவுசெய்யும்போது குழப்பிப்போனோம். பல தடவை அந்தத் தகவலை மீண்டும் மீண்டும் கூறும்படியாக இருந்தது.” - போக்சோ வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஒரு தாயின் குரல் இது.

போக்சோ சட்டம் 2012-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் போக்சோ சட்டம். பள்ளிகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அதிகாரிகள் விரைவாக செயல்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வாங்கித் தரவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் போக்சோவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் போக்சோ மூலம் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் வெளிச்சத்துக்கு வருவது ஆரோக்கியமான போக்குதான். ஆனால், போக்சோவை அணுகும் சிறுவர்களுக்கு அந்த வழக்கின் பாதை இலகுவாக இல்லை என்றும், மன அழுத்தத்தை தரக் கூடியதாக உள்ளது என்றும் சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இன்னமும் சில இடங்களில் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை முறை பின்பற்றபடுகிறது என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைகின்றனர்.

இதுகுறித்து பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் ஒருவர் பேசும்போது, “என் மகள், என் கணவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கை நான் போக்சோ மூலம் அணுகும்போது அசவுகரியத்தை உணர்ந்தேன். விசாரணையின்போது ஒவ்வொரு முறையும் என் கணவரால் என் மகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவலை நானும், என் மகளும் பதிவுசெய்யும்போது குழப்பிப் போனோம். பல தடவை அந்தத் தகவலை மீண்டும் மீண்டும் கூறும்படியாக இருந்தது. என் கணவர் செய்தது எனக்கு எப்படி தெரியாமல் இருந்தது என்று நான் கூற வேண்டியிருந்தது . நான் சொல்வதை யாராவது பொறுமையாக கேட்பார்களா என்று நான் ஏங்கினேன்” என்றார்.

போக்சோ வழக்கின் உண்மைக் கண்டறியும் குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் நிர்மலா ராணி கூறும்போது, “மதுரையில் 33 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அறிவியல் ஆசிரியர் மீது புகார் எழுந்தது. புகாரின் அடுத்த நாள் அந்தக் குற்றம்சாட்டப்பட்டவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். போக்சோ சட்டம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இம்மாதிரியான நிகழ்வு மாணவிகளை மனதளவில் பாதிக்கும். ஆகவே பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வழக்கு விசாரணையின்போது நாங்கள் முழு உறுதுணையையும், ஒத்துழைப்பையும் அளிக்கிறோம்” என்றார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்”

போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படும் வழக்குகள் கடந்த பத்து ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.

* 2021 ஆம் ஆண்டு - 43 வழக்குகள்
* 2013 ஆம் ஆண்டு - 660 வழக்குகள்
* 2014 ஆம் ஆண்டு - 1008 வழக்குகள்
* 2015 ஆம் ஆண்டு - 1,574 வழக்குகள்
* 2016 ஆம் ஆண்டு - 1,654 வழக்குகள்
* 2017 ஆம் ஆண்டு - 1,667 வழக்குகள்
* 2018 ஆம் ஆண்டு - 2,126 வழக்குகள்
* 2019 ஆம் ஆண்டு - 2,465 வழக்குகள்
* 2020 ஆம் ஆண்டு - 3,187 வழக்குகள்

அதிகரித்து வரும் வழக்குகள் குறித்து குழந்தை நல அமைப்பின் உறுப்பினரான லலிதா பேசும்போது, ”போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை மறைத்து, குறைத்து பதிவுச் செய்யவில்லை என்பதை நீங்கள் காணலாம். போக்சோ குறித்தான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை நீங்கள் காணலாம். எனினும், போக்சோ குறித்த புரிதல் இல்லாமல் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற பதின்பருவத்தினர் தொடர்பான வழக்குகள் இதில் பதிவுச் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் கருத்து தெரிவித்து இருந்தது. எனவே, போக்சோ சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்” என்றார்.

2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக உள்ளன. இதன்மூலம் சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்படும் பிரிவில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

அந்த வகையில் போக்சோ தொடர்பான விழிப்புணர்வுகள் அவசியமாகிறது. அதே நேரத்தில் போக்சோ வழக்கை அணுகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் எளிமையான, நட்புறவான சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும். விசாரணை என்ற பெயரில் குழந்தைகளிடம் மீண்டும் மீண்டும் அவர்களது இருண்ட நாட்களை நினைவுப்படுத்துவது எந்த வகையிலும் முறையாகாது. இந்த சிக்கலான சட்ட அணுகுமுறை காரணமாக பாதிக்கப்பட்ட சிறார் புகாரளிக்காத சுழலும் உருவாகும்

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு போக்சோ சட்டத்தில் சீர்ப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தகவல் உறுதுணை: தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x