Published : 11 Apr 2022 03:42 PM
Last Updated : 11 Apr 2022 03:42 PM

பத்திரிகை பதிப்பாசிரியர் வெங்கடபதி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியர் வெங்கடபதி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: "தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி இன்று (11-04-2022) அதிகாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

பாமக நிறுவனர் ராதாஸ்: "தினமலர் நாளிதழின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியரும், ராமசுப்பையரின் மூத்த மகனும் ஆகிய வெங்கடபதி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சிறந்த கல்வியாளரும், பொறியாளருமான வெங்கடபதி சென்னை எம்ஐடியில் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வானூர்தி பொறியியல் படித்த அதே காலகட்டத்தில் வானூர்தி பொறியியல் படித்தவர் ஆவார். வெங்கடபதியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தினமலர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: "தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோயில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி இன்று 11.04.2022 இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: "தினமலர் பத்திரிகையின் நெல்லை மற்றும் நாகர்கோவில் பதிப்புகளின் உரிமையாளரும், கல்வியாளருமான முனைவர். R.வெங்கடபதி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்னாரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும், தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: "தினமலர் நாளிதழின் பங்குதாரரும், தலைசிறந்த வானூர்தி பொறியாளருமான வெங்கடபதி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு தினமலர் குடும்பத்துக்கு பெரும் இழப்பு. ராமசுப்பையரின் மூத்த மகனான வெங்கடபதி, பொறியாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தினமலர் நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x