Published : 10 Apr 2022 11:22 AM
Last Updated : 10 Apr 2022 11:22 AM

கல்லூரி தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் இரண்டு மடங்கு, மும்மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

கரோனா தொற்று நோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், வங்கிகள் மூலமாகவும், தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவும், தனியாரிடமும் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தனர். இந்த நிலை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்த நிலையில், கரோனா தாக்கம் சற்று குறைந்ததையடுத்து ஓரளவு இயல்பு நிலை திரும்பி, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், அந்த கல்வியாண்டிற்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் முடப்பட்டு, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போதுதான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைக் கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதேபோன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. பெரும்பாலான மாணவ, மாணவியர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து மாணவ, மாணவியர் போராட்டங்களை நடத்தியும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. பழைய கட்டணத்தையே தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வசூலிக்கவும், இதர பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நிலவுகிறது.

எனவே, தமிழக முதல்வர் மாணவ, மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x