Last Updated : 09 Apr, 2022 12:06 PM

 

Published : 09 Apr 2022 12:06 PM
Last Updated : 09 Apr 2022 12:06 PM

தஞ்சை ரயில் நிலையத்தில் நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறப்பு

தஞ்சாவூர்: மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் "ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் அந்தந்த உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் முதற்கட்டமாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் 6 ரயில்வே கோட்டங்களில் கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது. அதில் திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த திட்டத்தில் தஞ்சாவூர் ரயில்வே நிலையம் தேர்வு செயப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி அரங்கு அமைக்கப்பட்டது. இந்த கைவினைப்பொருட்கள் விற்பனை பிரத்தியேக அரங்கை இன்று 9-ம் தேதி காலை திருச்சி கோட்ட முதன்மை வணிக மேலாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிலைய மேலாளர் சம்பத்குமார், அரங்க ஒருங்கிணைப்பாளர் ஓவியர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அரங்கில் நெட்டியால் தயார் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலை, ராஜ ராஜ சோழனுடன் கூடிய பெரிய கோயில், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமர், நாகூர் தர்கா, முனீஸ்வரன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் கோபுரங்கள் மற்றும் நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனை ரயில்வே நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு நெட்டியால் தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ ரயில்வே கோட்டத்துக்கு ஒரு ரயில்வே நிலையம் வீதம் தமிழகத்தில் 6 ரயில்வே நிலையங்களில் உள்ளூர் பொருட்களின் விற்பனை அரங்கு தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி கைவினை பொருட்கள் விற்பனை அரங்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அரங்கு இன்னும் 15 நாட்களுக்கு ரயில் நிலையத்தில் செயல்படும். அதன் பின்னர் அவற்றை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் மற்ற ரயில்வே நிலையங்களிலும் கைவினைப் பொருட்கள், கலைப்பொருள் விற்பனை அரங்கு தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்படித் தொடங்கும் பட்சத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ள ஊரில் எந்த பொருள் சிறப்பு வாய்ந்ததோ அந்தப் பொருள் விற்பனைக்காக வைக்கப்படும். இதன் மூலம் கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். மேலும் உள்ளூர் கலைப்பொருட்களை நாடறிய செய்ய முடியும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் நிலையத்தில் நெட்டி விற்பனை அரங்கு வைத்துள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதியான ராதா- எழில்விழி கூறும்போது, “
மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் நெட்டியின் புகழ் வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் தெரியவரும். இந்த அரங்கில் ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x