சூரிய ஒளி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம்: ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சூரிய ஒளி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம்: ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

சூரியஒளி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணை யம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் சூரியஒளி மின்சாரத்துக்கு விலையை நிர்ணயம் செய்து அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.5 முதல் ரூ.11 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண சூரிய ஒளியை அப்படியே பயன்படுத்தி உற்பத்தி செய்வது மற்றும் குறிப்பிட்ட நிலைக்கு மேல் வெப்பம் உண்டாக்கி மின்சாரம் உற்பத்தி செய்வது என இரண்டு விதமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

எனவே சாதாரண சூரியஒளி மூலம் உண்டாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10-க்கும், அதிக வெப்பசக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.11.12-க்கும் மின் வாரியத்துக்கு விற்பனை செய்யலாம்.

கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகத்தில் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரியஒளி மின் உற்பத்தி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, அதானி நிறுவனம் 360 மெகாவாட், சன் எடிசன் 150 மெகாவாட், வெல்ஸ்பன் 100 மெகாவாட் என இதுவரை 610 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. இதைத் தவிர, வீடுகளில் மேற்கூரைகளின் மீது சூரியஒளி மின்னுற்பத்தி தளங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in