Last Updated : 08 Apr, 2022 08:49 PM

 

Published : 08 Apr 2022 08:49 PM
Last Updated : 08 Apr 2022 08:49 PM

ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டிய வழக்கு: தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 9 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி 

உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை | கோப்புப்படம்.

மதுரை: மதுரை, திருவாடானையில் நடைபெற்ற ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 9 பேர் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மதுரை கோரிப்பாளையம், ராமநாதபுரம் திருவாடானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பேசியவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த அசன்பாட்ஷா, அபிபுல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனிஉமர்கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மதுரை, திருவாடானையில் ஆர்ப்பாட்டங்களுக்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்தோம். நாங்கள் யாரும் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவோம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸாரிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை. திடீரென டிராக்டரை மேடையாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஒலிபெருக்கி பயன்படுத்தியுள்ளனர். மனுதாரர்கள் மீது வேறு வழக்குகளும் உள்ளன. நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், 9 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி கே.முரளிசங்கர் இன்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x