Published : 08 Apr 2022 06:12 PM
Last Updated : 08 Apr 2022 06:12 PM

அமித் ஷாவின் 'இந்தி திணிப்பு' பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதன் பொருள், மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்திதான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பொருள், மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான்.

இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுதான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு.

இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குதான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x