Published : 08 Apr 2022 05:31 AM
Last Updated : 08 Apr 2022 05:31 AM

அதிமுக உட்கட்சி தேர்தல் ஏப்.19-ல் தொடங்கும் - ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்குவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 25 மாவட்டங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி நடந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தேனி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் அடங்கிய அமைப்பு ரீதியான 25 மாவட்டங்களுக்கு 2-ம் கட்டமாக வரும் 11-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல், திருச்சி, மதுரை, பெரம்பலூர், திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அடங்கிய 25 மாவட்டங்களுக்கு 16-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைப்பு ரீதியான 75 மாவட்டங்களுக்கு செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 19, 21-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

அதன்பிறகு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய பிற மாநிலங்களுக்கான கிளை, பஞ்சாயத்து, வட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் 23-ம் தேதியும், தொகுதி, பகுதி, நகரம், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் 24-ம் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x