Published : 28 Apr 2016 12:56 PM
Last Updated : 28 Apr 2016 12:56 PM

பணம் பதுக்கல் புகார் எதிரொலி: அதிமுக நிர்வாகி வீட்டில் அதிகாரிகள் விடிய விடிய சோதனை

தருமபுரியில் அதிமுக பிரமுகர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய தேர்தல் மற்றும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். இவர் கிருஷ்ணகிரி ஆவின் பால்வள ஒன்றிய தலைவராக இருந்தவர். இவரது வீடு தருமபுரி கடைவீதி அடுத்த ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் இரவு தருமபுரி மாவட்ட தேர்தல் பிரிவுக்கு புகார் வந்தது.

இந்த புகாரை அடுத்து தருமபுரி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் டி.கே.ராஜேந்திரன் வீட்டில் குவிந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தருமபுரி மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்களான சசிகாந்த் குஷ்வாகா, ராகேஷ் தீபக் ஆகியோரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். டி.கே.ராஜேந்திரனின் வீடு, அருகிலிருந்த அவரது பழைய வீடு, அவரது கார் உள்ளிட்ட வாகனங்கள், வீட்டுக்கு அருகில் இருந்த நெருங்கிய உறவினர் வீடு, அதியமான்கோட்டை அடுத்த புறவடை பகுதியில் அமைந்துள்ள அவரது கிரானைட் நிறுவனம் ஆகியவற்றில் அடுத்தடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை நேற்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. சோதனையை முடித்த பின்னர் அதிகாரிகள் சூட்கேஸ் ஒன்றை மட்டும் உடன் எடுத்துச் சென்றனர். சோதனையில் பணம் அல்லது பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘சோதனை தொடர்பான தகவல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் மட்டும் தான் தெரிவிக்க முடியும்’ என்று கூறிச் சென்றனர்.

இதற்கிடையில், சோதனையின்போது, ரூ.12 லட்சத்து 200 பணமும் மற்றும் சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதைத் தான் அதிகாரிகள் சூட்கேஸில் எடுத்துச் சென்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை. இரவு முழுக்க நடந்த இந்த சோதனையின்போது டி.கே.ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் ஆத்துமேடு பகுதியில் அதிக அளவில் திரண்டனர். இதனால் தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பரப்பரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x