

கள்ளக்குறிச்சி: கட்டிடப் பணிகள் நிறைவடையாத நிலையி லேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல் லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனை முற்றிலுமாக இயங்காமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் ரூ.381 கோடியே 76 லட்சம் மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. கடந்த ஜனவரி 13-ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக இதனை திறந்து வைத்தார். 150 மாணவர்கள் பயிலக்கூடிய கல்லூரியில் வகுப்புகளுக்கான கட்டிடப் பணிகள் மட்டும் முடிவுற்று, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை கட்டிடப் பணிகள் நிறைவடையவில்லை. நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு, படுக்கை வசதி மற்றும் ஆய்வுக் கூடம், உடற்கூறியல் அருங்காட்சியகம் மற்றும் உடற்கூறியல் ஆய்வறை உள்ளிட்ட கட்டிடப் பணிகளும் முடிவடையவில்லை.
மொத்தத்தில், மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியத் தேவையான மருத்துவமனை செயல்படாத நிலையில் மருத்துவக் கல்லூரி இயங்கத் தொடங்கியிருக்கிறது.
‘கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்திற்கு ஒருமருத்துவக் கல்லூரி தொடங்க திட்டமிட்டு, மருத்துவக் கல்லூரிகளை அமைத்து வரு கின்றன.
ஆட்சி மாற்றம் காரணமாக ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை கட்டிடப்பணிகள் நிறைவடைவதில் தாமதம் நிலவுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.
துணை முதல்வர் விளக்கம்
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷாவிடம் கேட்டபோது, “கல்லூரிக்கான வகுப்பறை கட்டிடப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, முதலா மாண்டு வகுப்புகள் தொடங்கி, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாணவர்களுக்கான விடுதிகளும் இயங்கி வருகின்றன. மருத்துவமனைக் கட்டிடப் பணிகள் ஓரிரு வாரங்களில் முடிந்து, கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனையில் ஏற்கெனவே இயங்கி மருத் துவம் சார் இயந்திரங்கள், படுக்கை வசதிகள், ஆய்வக வசதிகள் இங்கு மாற்றப்படும்.
மேலும், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமே தற்போது பயில்வதால், அவர்களுக்கு பாடங்கள் மட்டுமே நடத்தப்படும். அந்த மாணவர்களுக்கு ஆய்வகம் செல்லும் அவசிய மில்லை” என்று தெரிவித்தார்.