Published : 29 Apr 2016 07:48 AM
Last Updated : 29 Apr 2016 07:48 AM
திருப்பத்தூர் அருகே அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.40 கோடி பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அங்கு தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை ஊராட்சி வார்டு கவுன்சிலர் இலக்கியாவின் வீட்டில் ரூ.40 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு வழங்க பிரித்துக் கொடுக்கப் படுவதாகவும் திருப்பத்தூர் தேர்தல் அலுவலருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
இதையடுத்து, கொரட்டி வருவாய் ஆய்வாளர் முரளிகிருஷ்ணா தலைமை யிலான தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு, கவுன்சிலர் இலக்கியாவின் வீட்டில் சோதனை நடத்தியதில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை ஊராட்சி யைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது, “அதிமுக நிர்வாகிகள் வீட்டில் பணத்தை பதுக்கி, பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், இதுவரை எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம்” என்றனர்.
உதகையில் கவுன்சிலர் வீட்டில் சோதனை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அதிமுக கவுன்சிலர் அனூப் கான் வீடு துப்புக்குட்டி பேட்டையில் உள்ளது. இவர் தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
நேற்று மதியம் இவரது வீட்டை வருமான வரித்துறையினர் சுமார் 4 மணி நேரம் சோதனையிட்டனர். சோதனையின்போது ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT