7 பேர் விடுதலை | குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் அனுப்பியது எப்போது? - உயர் நீதிமன்றம் கேள்வி

7 பேர் விடுதலை | குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் அனுப்பியது எப்போது? - உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்துவரும் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் எந்தத் தேதியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வநதபோது, "ஆளுநருக்கு எதிராக உத்தரவிடும்படி கோர முடியாது. ஏற்கெனவே 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எப்படி ஏற்க முடியும், தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் எனவும் தெரிவித்தார்.

பின்னர், முன்கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?" என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேரறிவாளன் மட்டுமல்லாமல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in