Published : 07 Apr 2022 06:27 AM
Last Updated : 07 Apr 2022 06:27 AM

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு | தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்; சாட்சி கூறிய வழக்கறிஞர் தற்கொலையால் பரபரப்பு

கோபிநாத்

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் சாட்சியாக இருந்த வழக்கறிஞர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் சுகேஷ் சந்திரசேகரை 2017 ஏப். 16-ல் கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷின் வாக்கு மூலத்தைவைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்.25-ல் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மேலும், விவகாரத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரை, இரட்டை இலை சின்னம் வழக்கில் அமலாக்கத் துறையினரும் கைது செய்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அப்போது, டிடிவி தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சுகேஷின் வாக்குமூலத்தின்படி டிடிவி தினகரனுக்குஅமலாக்கத்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை 8-ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ‘அமலாக்கத்துறையில் இருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. சம்மன் அனுப்பப்பட்டால் கட்டாயம் விசாரணைக்கு ஆஜராவேன்’ என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(31). பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 5-ம் தேதி இரவு வீட்டின் எதிரே உள்ள குடிசையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டபோது, அவரது வழக்கறிஞரான ராமாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோகன்ராஜுவிடம் ஜுனியர் வழக்கறிஞராக இருந்தவர் கோபிநாத். இரட்டை இலை லஞ்ச புகார் விவகாரத்தில் 2017-ல் வழக்கறிஞர் கோபிநாத் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர். விசாரணையின்போது, தினகரன் தரப்பில் இருந்து லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என வழக்கறிஞர் கோபிநாத் கூறியிருந்தார். சுகேஷ்சந்திரசேகர் கைது செய்யப்படும்போது கோபிநாத் அருகே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், மோகன்ராஜ் கூறிய தகவல்களை சுகேஷ் சந்திரசேகருக்கு கோபிநாத் தனது செல்போன் மூலம் தெரிவித்து இருக்கிறார். எனவே, இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராக கோபிநாத்தை அமலாக்கத் துறையினர் சேர்த்துள்ளனர். 8-ம் தேதி விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியதோடு, இதுகுறித்து 5-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டும் அறிவுறுத்தியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x