ஜவளகிரி காப்புக்காடு தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்: மாவட்ட வன அலுவலர் நேரில் ஆய்வு

பணிகளைப் பார்வையிடும் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி
பணிகளைப் பார்வையிடும் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி
Updated on
1 min read

ஓசூர்: கோடை காலத்தையொட்டி, வனத்துறை சார்பில் ஜவளகிரி காப்புக்காடுகளில் நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியை மாவட்ட வன அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜவளகிரி வனச்சரகத்தில் வாழும் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் குடி தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வனத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன.

இதில் கர்நாடக மாநில வனப்பகுதிகளான கோடிஹள்ளி, ஹாரஹள்ளி, ஆனேக்கல் உள்ளிட்ட காப்புக்காடுகளை ஒட்டியவாறு ஜவளகிரி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த ஜவளகிரி வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட பல்வேறு அரியவகை பட்டியலில் இடம்பெற்றுள்ள வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சரகத்தில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறை சார்பில் தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 செயற்கையான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஜவளகிரி வனச்சரகத்தில் கோடை காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே கடும் வெயில் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், இங்குள்ள வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், இந்த 7 தொட்டிகளிலும் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் கூறியதாவது: "ஜவளகிரி வனச்சரகத்தில் உள்ள வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உத்தரவின் படி முதல்கட்டமாக ஜவளகிரி காப்புக்காட்டில் உள்ள 7 தொட்டிகளிலும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரம்பும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

இங்குள்ள 10-க்கும் மேற்பட்ட இயற்கையான ஏரிகளில் போதுமான குடிநீர் உள்ளது. தற்போது வறட்சி அதிகமாக உள்ள வனப்பகுதிகளில் செயற்கையாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் குடிதண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குறைய குறைய தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணியை கோடை காலம் முழுவதும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன்படி கோடைகாலம் முழுவதும் வனத்தில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலம் குடிநீர் நிரப்பப்படும். இதன் மூலமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக்காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படுகிறது." என்று வனச்சரகர் சுகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in