Published : 05 Apr 2022 09:34 PM
Last Updated : 05 Apr 2022 09:34 PM

மயிலை கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ’சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பின், அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ’மயில் அலகில் மலர்தான் இருந்தது என்பது தெரியவந்தது. சிலை மாயமானதற்கு காரணமான அதிகாரிகளை அடையாளம் காண, உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விசாரணையை முடிக்க 6 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ’மயில் சிலை மாயமானது குறித்து காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது. தொல்லியல் துறையிடம் இருந்து, சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளது. சிலையை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், இந்த வழக்கில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். காவல்துறை விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என அறிவுறுத்திய நீதிபதிகள், மயிலின் அலகில் மலர்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். இடைப்பட்ட காலத்தில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலையை தயாரிக்கும் பணியை தொடங்கும்படி, அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x