Published : 04 Apr 2022 03:42 PM
Last Updated : 04 Apr 2022 03:42 PM

சீமை கருவேல மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதிக் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, இதுதொடர்பாக கொள்கையை வகுக்க கால அவகாசம் கோரியிருந்தது.

இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மேலும், தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x