Published : 04 Apr 2022 01:56 PM
Last Updated : 04 Apr 2022 01:56 PM

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், 2010-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்குகளை ரத்து வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர், வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் இல்லை. புகார் மட்டுமே தாமதமாக அளிக்கப்பட்டது, இதனை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது. சிவசங்கர் பாபா மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x