Published : 04 Apr 2022 01:27 PM
Last Updated : 04 Apr 2022 01:27 PM

இளையராஜா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு: இன்ரிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜா | கோப்புப் படம்

சென்னை: கடந்த 1980-களில் வெளியான 20 தமிழ் திரைப்படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்ரிகோ (INRECO) உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான, 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளுக்கு, படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் (INRECO) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை, இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை எனக்கூறி, அவற்றை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் தியாகராஜன் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், படத் தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி கம்பெனிக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது. படத் தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல.

மேலும், இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x