Published : 04 Apr 2022 01:05 PM
Last Updated : 04 Apr 2022 01:05 PM

பெண்கள், பொதுமக்களுக்கான 'காவல்  உதவி' செயலி அறிமுகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட 'காவல் உதவி' செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4,4,2022) தொடங்கிவைத்தார். உடன் தமிழக அரசின் உயரதிகாரிகள்

சென்னை: காவல்துறை கட்டுப்பாட்டுஅறையிலிருந்து நேரடியாக பெண்கள், பொதுமக்களுக்கான சேவை; 'காவல் உதவி' செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , "காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் 'காவல் உதவி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.

'காவல் உதவி' செயலியின் சிறப்பம்சங்கள் : 'அவசரம்' உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற 'அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க 'Dial-100' என்ற செயலி 'காவல் உதவி' செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார், முதியோர் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம். இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்தபுகார் (Lost Document Report), CSR / FIR –குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect), காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112-India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

இச்செயலியை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x