

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மானுப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் உடைந்து சேதமாகின.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘மானுப்பட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பப்பாளி மற்றும் வாழை மரங்கள் சேதமாகின. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறும்போது, ‘‘பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்புடைய நிலங்களில் ஆய்வு செய்து அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.