Published : 03 Apr 2016 06:58 PM
Last Updated : 03 Apr 2016 06:58 PM
சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டல் முன்பாக அதிமுகவினர் ரகளையில் ஈடுபடுவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''பிரச்சாரத்துக்காக சேலம் சென்றிருந்த தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். தாதகாப்பட்டியில் கடந்த 2-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, திமுக, அதிமுகவை விமர்சித்து பேசினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவினர் சிலர் , பிரேமலதா தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும்.
எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க முனையும் வன்முறை செயலாகும். தலைவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.
இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளை தடுத்த நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT