Published : 05 Apr 2022 05:28 AM
Last Updated : 05 Apr 2022 05:28 AM

மத்திய அரசின் நிபந்தனையால்தான் சொத்து வரி உயர்வு: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த நாங்களும் விரும்பவில்லை. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்ற மத்திய அரசின் நிபந்தனையால்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

‘உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரியை உயர்த்த வேண்டும். அதன்பேரில்தான் மத்தியஅரசின் மானியங்கள் விடுவிக்கப்படும்’ என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.

சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகுதற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளை பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் வருவாய் குறைந்துள்ளது. ஆனால், செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2010-11ல் சென்னை மாநகராட்சியில் 60 சதவீதமாக இருந்த வருவாய்,2015-16ல் 51 சதவீதமாக குறைந்தது. இப்போது 2020-21ல் 43 சதவீதமாக குறைந்துள்ளது.

முதல்வர் கவனமாக முடிவு

சொத்து வரியை உயர்த்தியதில், ஏழை, நடுத்தர மக்களை அதிகம் பாதிக்காத வகையில் முதல்வர் கவனமாக முடிவெடுத்துள்ளார்.

இந்த வரி உயர்வு குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர், ‘ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு’ என்கிறார். இந்த வரியை கடந்த 2018-ம் ஆண்டில் அவர்களது ஆட்சியின்போது 200 சதவீதம் வரை உயர்த்தினர். தேர்தல் வந்ததால், தேர்தலுக்கு பிறகு முழுமையாக உயர்த்த முடிவெடுத்திருந்தனர். ஏழை, பணக்காரர் என்று இல்லாமல் ஒரே மாதிரியான வரி உயர்வை அவர்கள் அறிவித்தனர். தற்போது ஏழைகளுக்கு குறைவாகவும், பணக்காரர்களுக்கு வரி கூடுதலாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரி உயர்வு ஏன்?

சென்னையில் உள்ள 54 லட்சம் பேரில் 600 சதுரஅடிக்கு குறைவான வீட்டில் வசிப்பவர்களுக்கு 25 சதவீதம், அதைவிட பெரிய வீட்டில்வசிப்பவர்களுக்கு 50 சதவீதம்,வணிகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ள நேரத்தில் வீட்டு வரி உயர்வை தவிர்த்திருக்கலாமே?

நாங்களும் வரியை உயர்த்த விரும்பவில்லை. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, வரியை உயர்த்தினால்தான் நிதிதருவோம் என்று மத்திய அரசுஉத்தரவிட்டதால் உயர்த்தியுள்ளோம். கடந்த ஆண்டே ரூ.7 ஆயிரம்கோடி தரப்படவில்லை. தேர்தல் நடத்தினால் தருவோம் என்றார்கள். அனைத்து மாநிலங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிபந்தனையால் உயர்த்தப்பட்டதா? இதனால் கூடுதலாக எவ்வளவு வருவாய் கிடைக்கும்?

மத்திய அரசின் நிபந்தனையால்தான் உயர்த்தப்பட்டது. பிப்ரவரிக்குள் சொத்து வரியை உயர்த்தாவிட்டால், இந்த மாதம் வரும் தொகை நிறுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்த வரி உயர்வால் பெருநகராட்சிகளில் 100 சதவீதமும், தாலுகாஅளவில் 30, 40 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 25 சதவீதமும் வருவாய் உயரும்.

அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது நீங்கள் போராட்டம் நடத்தினீர்களே?

அவர்கள் உயர்த்தியபோது மத்திய அரசு இந்த நிபந்தனை விதித்ததா என்பது தெரியவில்லை. தற்போது 15-வது நிதி ஆணையத்தின்படி, சொத்து வரியை நாம் உயர்த்தினால்தான் பணமே தருவார்கள். இல்லாவிட்டால் ரூ.15 ஆயிரம் கோடி வராது. அதனால் வளர்ச்சிப் பணி தடைபடும் என்பதால் உயர்த்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x