போக்சோ வழக்குகளில் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி

போக்சோ வழக்குகளில் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி
Updated on
2 min read

சென்னை: போக்சோ வழக்குகளில் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்வதற்காக, பெண் காவல்துறை உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான நடந்த ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒருநாள் பயிற்சி முகாமினை சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஏப்.2) தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில், போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரிகள், போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் (SOP) குறித்தும், நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புலனாய்வு மேற்கொள்ளுதல், கோப்புகள் கையாளுதல், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உட்பட இவ்வழக்குகள் புலனாய்வு முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி இயக்குநர் டி.லிங்கேஸ்வரன், துணை இயக்குநர் ரிஷிகோஷல், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆதிலட்சுமி லோகநாதன், இ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில், சென்னைப் பெருநகர காவல்துறையின் உதவி ஆணையர்கள், பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், சென்னைப் பெருநகர கூடுதல் ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, என் கண்ணன், காவல்துறை இணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in