Published : 02 Apr 2022 08:26 AM
Last Updated : 02 Apr 2022 08:26 AM

டெல்லியில் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்

சென்னை: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திஉள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்குடெல்லியில் அலுவலகம் அமைக்கஇடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், 2013-ல் திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது.

பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் கடந்த டிசம்பரில் முடிவுற்றன. கடந்த ஜனவரியில் கட்டிடத்தை திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், கரோனாபரவல் அதிகரித்ததால் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நேரில் சந்தித்து அழைப்பு

இதையொட்டி, டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இதுதவிர, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.முன்னிலை வகிக்கிறார். தமிழக மூத்த அமைச்சர்கள் பலரும் விழாவில் பங்கேற்கின்றனர். மொத்தமாக 8 ஆயிரம் சதுரஅடியில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x