Published : 02 Apr 2022 08:52 AM
Last Updated : 02 Apr 2022 08:52 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய சாகுபடி 9,180 ஹெக்டேர் அதிகரிப்பு: மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பியதால் 3 போகம் சாகுபடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்து வந்த பயிர் சாகுபடி கடந்த ஆண்டில் 9,180 ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்துள்ளது. மழைகாரணமாக ஏரி, குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் முப்போகம் நெல்சாகுபடி செய்ததும், மானாவாரி நிலங்களில் பல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்ததும் இதற்குக் காரணம் என்று விவசாயத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காஞ்சி, செங்கை மாவட்டங்கள்ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது 2017-18-ம்ஆண்டில் 1,05,455 ஹெக்டேர்விவசாய நிலங்கள் இருந்தன. இவற்றில் ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்தில் இரு போகம் சாகுபடி செய்யப்பட்டால் சாகுபடி பயிர்களின் அளவு (பயிர் சாகுபடி பரப்பு) 2 ஹெக்டேராகவும், மூன்று போகம் சாகுபடி செய்யப்பட்டால் 3 ஹெக்டேராகவும் கணக்கிடப்படுகிறது.

இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் 1,24,593 ஹெக்டேர் அளவுக்குச் சாகுபடி நடைபெற்றது. இந்த சாகுபடி நிலங்களின் பரப்பு 2018-19-ம் ஆண்டில் 96,169 ஹெக்டேராக குறைந்தது. பயிர் சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவும் 1,08,986 ஹெக்டேராக குறைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2019-20-ம் ஆண்டில் விவசாய சாகுபடி நிலங்களின் பரப்பு 36,766 ஹெக்டேராக இருந்தது. இந்த நிலங்களில் 48,145 ஹெக்டேர் அளவுக்குப் பயிர் சாகுபடிசெய்யப்பட்டது. நெல் சொர்ணவாரிபருவத்தில் 4,421 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 18,786ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டன.

ஏரிகள் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறுகள் மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெற்றன. மழையை எதிர்நோக்கும் மானாவாரி நிலங்களிலும் விவசாய பயிர்கள் பயிர் செய்யப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2020-21-ம் ஆண்டில் விவசாய நிலங்களின் பரப்பு 39,048 ஹெக்டேராக அதிகரித்தது. இந்த நிதி ஆண்டில் நெல் சொர்ணவாரி பருவத்தில் 6,774 ஹெக்டேரும், சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரும், நவரை பருவத்தில் 25,748 ஹெக்டேரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 57,365 ஹெக்டேர் அளவுக்குச் சாகுபடி நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு சாகுபடி பரப்பை ஒப்பிடும்போது 9,180 ஹெக்டேர் அதிகமாகும்.

இந்த ஆண்டில் ஏரிப் பாசனம் மூலம் 22,867 ஹெக்டேர் விவசாய நிலங்களும், ஆழ்துளைக் கிணற்றின் மூலம் 6,480 ஹெக்டேர் விவசாய நிலங்களும், கிணறு மூலம் 9,200 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன் பெற்றுள்ளன.

விவசாய உற்பத்தி அதிகரிப்பு?

ரியல் எஸ்டேட் வணிகமும், தொழிற் சாலை விரிவாக்கங்களும் வேகமாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உண்மையில் பயிர் சாகுபடி பரப்பும், விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளதா? என்பது குறித்து பல்வேறு விவசாயஅமைப்புகள், சமூக அமைப்புகளிடம் சந்தேகம் இருந்து வந்தது.

இது குறித்து விவசாயத் துறை இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதியிடம் கேட்டபோது, "கடந்த ஆண்டு மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஒரே நிலத்தில் இரு போகம், முப்போகம் கூட விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாய பயிர்களின் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களிலும் பலர் விவசாயம் செய்துள்ளனர்’’ என்றார்.

வாய்ப்புகள் உருவாக்கப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் ரியல் எஸ்டேட் வணிகர்களிடம்நிலத்தை விற்கின்றனர். தொழிற்சாலை விரிவாக்கம் போன்றவற்றால் பலர் வேலைக்குச் செல்வதால் விவசாய சாகுபடி குறைவதாக பல்வேறு விதமான கருத்துகளை பலர் கூறி வந்தனர்.

ஆனால் வாய்ப்புகள் இருக்கும்போது விவசாயத்தை விவசாயிகள் சரியாகவே செய்கின்றனர். விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்களுக்கு இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும்பாலாறு, செய்யாற்றில் தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களைத் தூர்வாரி நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் சரிந்து வரும் விவசாயத்துக்குப் புத்துயிர் கொடுக்க முடியும் என்று விவசாயச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.அவர்களுக்கு இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x