Last Updated : 01 Apr, 2022 09:08 PM

 

Published : 01 Apr 2022 09:08 PM
Last Updated : 01 Apr 2022 09:08 PM

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைக்குமார். இவரது மனைவியும் ஆசிரியர். கடந்த 2011- ல் கணவன், மனைவி இருவரும் பள்ளிக்கு சென்று விட, இவர்களின் 15 வயது மகளும், 5 வயது மகனும் வீட்டில் இருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்க விட்டனர். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்தும் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வழக்கு 2011-ல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணை 2013-ல் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ போலீஸாராலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து வழக்கை முடிவுக்கு கொண்டு வருமாறு திருச்சி முதன்மை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி, கலைக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அரசு தரப்பில் மனுதாரருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே ரூ.3 லட்சம் வழங்கப்பட்டிருப்பதால், ரூ. 7 லட்சத்தை 2 மாதத்தில் மனுதாரருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x