Last Updated : 01 Apr, 2022 03:26 PM

 

Published : 01 Apr 2022 03:26 PM
Last Updated : 01 Apr 2022 03:26 PM

அரசிதழில் இடம்பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்.

மதுரை: தமிழகத்தில் அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர் தர்மலிங்கம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் படைப்புத் திருவிழா நடத்தப்படும். திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இந்தாண்டு படைப்புத் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி தரவில்லை.
திமுக, அதிமுக மற்றும் கட்சிகள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரினால் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் கோயில் சார்பில் அனுமதி கேட்டால் தருவதில்லை. எனவே கறிவேப்பிலை காளியம்மன் கோயில் படைப்பு விழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரி தினமும் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அரசிதழில் இடம் பெறாத கிராமங்களில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்குவதில் அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "அரசிதழில் இடம் பெறாத ஊர்களில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படாது" என்றார். இதையடுத்து, மனு தொடர்பாக காரைக்குடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x