

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பஜனைக் கோயில் தெருவில் பெரியார் படிப்பகம் கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவு வாயில் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. நேற்று பட்டப்பகலில் இதன் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்து பெரியார்சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த திராவிட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரியார் சிலை முன்பு கூடினர். இதனால் போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் எஸ்பி நாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டறிந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்து வலியுறுத்தி திராவிட கழகத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சேதமடைந்த பெரியார் சிலையை போலீஸார் உடனே கட்டிட தொழிலாளி, மூலம் சரி செய்து வர்ணம் பூசினர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லாரி மோதி விழுப்புரம் நகரின் மைய பகுதியில் இருந்த பெரியார் சிலை சேதமடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பெரியார்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.